Saturday, 25 April 2015

நான் சுகமே!

நான் சுகமே!

எனக்கு எப்போதும் எந்தப் பிரச்சனையும் பெரிதாக நேர்ந்துவிடுவதில்லை.காரணம் என்னிடம் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் நிறைந்துள்ளதுதான்.நான் மன்னிப்புக்கோரவும்,மன்னிக்கவும் தயங்குவதே இல்லை.எவரிடமும் மன்னிப்புக்கேட்பதாலோ அல்லது எவரையும் மன்னித்துவிடுவதாலோ என்னுடைய தன்மானம் எந்தவிதத்திலும் பாதித்துவிடுவதாக நான் கவலை கொள்வதில்லை.முக்கியமாக சரணாகதி அடையும் மனப்பயிற்சி ஒருவருக்கு இருக்குமானால் அவருக்கு எந்தவிதமான மன உளைச்சலுக்கும் ஆளாக வேண்டிய அவசியமும் நெருக்கடி நிர்பந்தமும் ஏற்பட்டு அவர் சிக்கிக் கொள்ளமாட்டார் என்பதே எனது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்..பொதுவாக நான் என் மனதை எந்த சூழ்நிலையிலும் இறுக்கமாக வைத்துக்கொள்ளாமல் இயல்பான என்போக்கிலேயே அமைத்துக்கொள்ள என்னுடைய ஆளுமையை நான் நிலைப்படுத்தி வைத்துக்கொள்கிறேன்.மேலும் எந்தவொரு நிலையற்ற புற பொருட்களின் மீதோ ,சொத்துக்களின் மீதோ,சுயசுகங்களின் மீதோ என் மனதை அலைபாயவிடாமல் கட்டுக்குள் வைத்துக்கொள்ள நான் பழகிவிட்டேன்.இன்னொரு கூடுதலான இறைவன் எனக்கு அருளியுள்ள வரம் என்னவென்றால் இந்த நொடிவரை என்பேரில் எந்தவிதமான சொத்துரிமையும் கிடையாது ஓய்வு ஊதியம் பெறும் உரிமை ஒன்றைத் தவிற.அடுத்து விரிவான வெளிப்பழக்கமும் சமூக செல்வாக்கும் அரசியல் தொடர்பும் இல்லை என்பதும் எனது சுகமான அனுபவம்.மேலும்  பிறருக்கு இடையூறாக இல்லாமலும் கூடியமட்டும் உதவும் வாய்ப்போடும் இம்மண்ணில் இருக்கும் வரை வாழவேண்டும் என்பதே எல்லாம் வல்ல இயற்கையிடமும் அதன் செயலான இறைவனிடமும் நான் இறைஞ்சிகின்ற தொடர் விண்ணப்பமாகும்.

கொ.பெ.பி.அய்யா.